உள்ளாட்சி தேர்தல் தொடர்பான அறிக்கை ஆக.,31-க்குள் தாக்கல்!

உள்ளாட்சி தேர்தல் தொடர்பான அறிக்கையினை வரும் ஆக.,31 அன்று தாக்கல் செய்யப்படும் என மாநில தேர்தல் ஆனையம் தெரிவித்துள்ளது!

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Aug 6, 2018, 05:02 PM IST
உள்ளாட்சி தேர்தல் தொடர்பான அறிக்கை ஆக.,31-க்குள் தாக்கல்! title=

உள்ளாட்சி தேர்தல் தொடர்பான அறிக்கையினை வரும் ஆக.,31 அன்று தாக்கல் செய்யப்படும் என மாநில தேர்தல் ஆனையம் தெரிவித்துள்ளது!

தமிழக உள்ளாட்சி அமைப்புகளுக்கு தேர்தல் கடந்த 2016-ஆம் ஆண்டு நவம்பர் மாதம் நடைபெறவிருந்தது. இந்த தேர்தலில் ST பிரிவினருக்கு உரிய இட ஒதுக்கீடு வழங்கப்படவில்லை என்று திமுக சார்பில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி என்.கிருபாகரன், உள்ளாட்சி தேர்தலுக்கான அறிவிப்பே, தமிழ்நாடு பஞ்சாயத்து சட்டவிதிகளுக்கு உட்பட்டு பிறப்பிக்கப் படவில்லை என கூறி இந்த தேர்தல் அறிவிப்பை ரத்து செய்வதாக உத்தரவிட்டார்.

மேலும் சட்டவிதிகளை பின்பற்றி புதிய அறிவிப்பை வெளியிட்டு, 2016-ம் ஆண்டு டிசம்பர் 31-ஆம் தேதிக்குள் உள்ளாட்சி தேர்தலை நடத்தி முடிக்க வேண்டும் என்று உத்தரவிட்டார். இதனையடுத்து கடந்த 2016-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் இந்த உத்தரவு வெளியானது.

இந்த உத்தரிவினை எதிர்த்து தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. இந்த மேல்முறையீட்டு வழக்கை சென்னை நீதிமன்ற டிவிசன் பெஞ்ச் விசாரித்து உள்ளாட்சி தேர்தலை விரைவாக நடத்த வேண்டும் என உத்தரவிட்டது.

இந்த உத்தரவினை எதிர்த்து தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. இந்த மேல்முறையீட்டு மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம் தேர்தலை விரைவாக நடத்த வேண்டும் என கருத்து தெரிவித்தது. இந்த உத்தரவிற்கு பின்னரும் உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படவில்லை.

இதனையடுத்து திமுக சார்பில் RS பாரதி, சென்னை உயர்நீதிமன்றத்தில் அவமதிப்பு வழக்கை தாக்கல் செய்தார். இந்த வழக்கு விசாரணை தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, M சுந்தர் ஆகியோர் கொண்ட அமர்வில் நடைப்பெற்று வருகின்றது.

இவ்வழக்கில் இருதரப்பு வாதங்களும் முடிவடைந்த நிலையில், “உள்ளாட்சி தேர்தல் எப்போது நடத்தப்படும்?” என்று நீதிபதிகள் கேட்டதற்கு “தொகுதி வரையறை பணி முடிந்ததும் உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படும்” என்று தேர்தல் ஆணையம் சார்பில் பதில் அளிக்கப்பட்டது. 

இதையடுத்து விசாரணையை தள்ளிவைத்த நீதிபதிகள், ‘உள்ளாட்சி தேர்தல் அட்டவணையை ஜூலை 31 அன்று நீதிபதிகள் தெரிவித்தனர். பின்னர் ஆக., 6-ஆம் நாள் உள்ளாட்சி தேர்தலுக்கான வரையறை தாக்கல் செய்யுமாறு தெரிவித்து வழக்கினை ஒத்திவைத்தது.

இதனையடுத்து இன்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது., விசாரணையின் போது உள்ளாட்சி தேர்தலுக்கான 'வார்டுகள் வரையறை செய்யப்பட்டு வரும் ஆக., 31-ல் அரசுக்கு அறிக்கை தாக்கல் செய்யப்படும், அதன் பின்னர் 2 மாதங்கள் கழித்து உள்ளாட்சி தேர்தல் குறித்த அறிவிப்பு வெளியிடப்படும் என மாநில தேர்தல் ஆணையம் அறிக்கை தாக்கல் செய்துள்ளது!

Trending News