குன்னூரில் சுற்றுலா பேருந்து விபத்து... 8 பேர் பலி - நிவாரணம் அறிவித்த முதலமைச்சர்

Nilgris Bus Accident: உதகைக்கு சுற்றுலா சென்றுவிட்டு திரும்பியபோது, குன்னுார் - மேட்டுப்பாளையம் தேசிய நெடுஞ்சாலை மரப்பாலம் பகுதியில் தனியார் பேருந்து விபத்தில் சிக்கி 8 பேர் உயிரிழந்தனர். 

Written by - Sudharsan G | Last Updated : Sep 30, 2023, 10:05 PM IST
  • அந்த பேருந்தில் 54 பேர் இருந்ததாக கூறப்படுகிறது.
  • இவர்கள் தென்காசி மாவட்டத்தை சேர்ந்தவர்கள் என கூறப்படுகிறது.
  • பேருந்து 50 அடி பள்ளத்தில் கவிழந்தது என கூறப்படுகிறது.
குன்னூரில் சுற்றுலா பேருந்து விபத்து... 8 பேர் பலி - நிவாரணம் அறிவித்த முதலமைச்சர் title=

Nilgris Bus Accident: தென்காசி மாவட்டம் பொட்டல்புதூர் அருகில் உள்ள கடையம் என்ற பகுதியில் இருந்து சுற்றுலா சென்றவர்களின் பேருந்து விபத்தில் சிக்கியுள்ளது. கடையத்தில் இருந்து 54 பேருடன் ஊட்டிக்கு சுற்றுலா வந்து மீண்டும் ஊருக்கு திரும்பியபோது, நீலகிரி மாவட்டம் குன்னுார் - மேட்டுப்பாளையம் தேசிய நெடுஞ்சாலை மரப்பாலம் பகுதியில் பிரேக் பிடிக்காமல் 50 அடி பள்ளத்தில் சுற்றுலா பேருந்து கவிழ்ந்ததாக கூறப்படுகிறது. 

அதில் பயணம் செய்த பலரும் படுகாயம் அடைந்தனர். அவர்கள் மீட்கப்பட்டு குன்னுார் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். இந்த விபத்தில் சிக்கி இதுவரை 8 பேர் உயிரிழந்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும், பேருந்து கவிழ்ந்த இடத்தில் மற்றவர்களை தேடும் பணியில்  தீயணைப்புத்துறையினர் மற்றும் காவல்துறையினர் தேடும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

மேலும் படிக்க | தமிழகத்தில் மருத்துவக் கழிவுகளை கொட்டும் கர்நாடக மருத்துவமனைகள்

முதலமைச்சர் இரங்கல்

விபத்தில் உயிரிழந்தவர்களில் 4 பேர் ஆண்கள், 4பேர் பெண்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர்கள் அனைவரும் தென்காசி மாவட்டம் கடையத்தை சேர்ந்தவர்கள் என உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து முதலமைச்சர் ஸ்டாலின் வெளியிட்ட இரங்கல் பதிவில்,"தென்காசி மாவட்டத்தில் இருந்து உதகமண்டலத்திற்கு தனியார் பேருந்து மூலம் சுற்றுலாவிற்கு சென்றவர்கள் இன்று (செப். 30) தென்காசிக்கு திரும்பும் வழியில், சுற்றுலாப் பேருந்து நீலகிரி மாவட்டம், குன்னூர் பர்லியாறு அருகே வந்துகொண்டிருந்தபோது எதிர்பாராதவிதமாக பள்ளத்தில் விழுந்த விபத்து ஏற்பட்டது.

அந்த பேருந்தில் பயணம் செய்த முப்புடாதி (67), முருகேசன் (65), இளங்கோ (64), தேவிகலா (42), கௌசல்யா (29) மற்றும் நிதின் (15) ஆகியோர் உள்ளிட்ட எட்டு பேர் உயிரிழந்தனர் என்ற துயரமான செய்தியினைக் கேட்டு மிகுந்த வேதனையடைந்தேன்.

சுற்றுலாத்துறை அமைச்சர் கா.ராமச்சந்திரனை விபத்து நடந்த இடத்தில் நடைபெற்றுவரும் மீட்பு மற்றும் நிவாரணப்பணிகளை மேற்பார்வையிட்டு துரிதப்படுத்தவும், மேலும் இவ்விபத்தில் படுகாயம் மற்றும் லேசான காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு சிறப்பு சிகிச்சை வழங்கவும் அறிவுறுத்தியுள்ளேன்.

நிவாரணம் அறிவிப்பு

உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கும், அவர்களது உறவினர்களுக்கும் எனது ஆறுதலையும், ஆழ்ந்த இரங்கலையும் தெரிவித்துக்கொள்வதோடு, உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா இரண்டு லட்சம் ரூபாயும், படுகாயமடைந்து சிகிச்சை பெற்றுவருபவர்களுக்கு தலா ஒரு லட்சம் ரூபாயும், லேசான காயமடைந்து சிகிச்சை பெற்றுவருபவர்களுக்கு தலா ஐம்பதாயிரம் ரூபாயும் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியில் இருந்து வழங்கிட உத்தரவிட்டுள்ளேன்" என குறிப்பிட்டுள்ளார். 

மேலும் படிக்க | பாஜக கூட்டணியை அதிமுக முறித்துக் கொண்டது ஏன் தெரியுமா?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News