அதிமுகவை அடகு வைக்கவில்லை பாதுகாப்பு பெட்டகத்தில் வைத்துள்ளோம்: ராஜேந்திரா பாலாஜி

அதிமுகவை யாரிடமும் அடகு வைக்கவில்லை. அது பாதுகாப்பாக பெட்டகத்தில் வைக்கப்பட்டு உள்ளது என தமிழக அமைச்சர் ராஜேந்திரா பாலாஜி கூறியுள்ளார்.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Mar 28, 2019, 05:42 PM IST
அதிமுகவை அடகு வைக்கவில்லை பாதுகாப்பு பெட்டகத்தில் வைத்துள்ளோம்: ராஜேந்திரா பாலாஜி title=

பஞ்ச் டயலாக் தடாலடியாக பேசக் கூடியவர்களில் அதிமுக-வை சேர்ந்த தமிழக அமைச்சர் ராஜேந்திரபாலாஜியும் ஒருவர். இவர் இன்று ஒரு நிகழ்ச்சியில் கலந்துக்கொண்ட போது பிரதமர் மோடி குறித்து அடித்த டயலாக், சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.

ஸ்ரீவில்லிபுத்தூரில் புதிய தமிழகம் கட்சியின் தேர்தல் அலுவலகம் திறப்பு விழா நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. அந்த நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டு அலுவலகத்தை திறந்து வைத்த அமைச்சர் ராஜேந்திரபாலாஜி, பின்னர் செய்தியாளர்களிடம் பேசினார், அப்பொழுது, திமுக, தினகரன் மற்றும் பாஜக குறித்து கேள்விகளுக்கு பதில் அளித்தார். அதில், 

> டிடிவி தினகரனை அவரது குடும்பமே அவரை மதிப்பதில்லை. தினகரன் அனுதாபத்தால் ஓட்டு வாங்க பார்க்கிறார். அது நடக்காது.

> வருகிற தேர்தலில் அதிமுக கூட்டணி வெற்றி பெற்று மீண்டும் மோடி பிரதமர் ஆவார். மோடி வில்லன் இல்லை. அவர் நாட்டை காக்கும் "ஸ்டெண்ட் மாஸ்டர்" கதாநாயகன் ஆவார். அவரால் மட்டுமே நாட்டை பாதுக்காக முடியும். நாட்டுக்கு பிரச்சனை என்றால், உடனடியாக முடிவெடுக்கக் கூடியவர்.

> அதிமுக-வை தொடர்ந்து திமுக விமர்சித்து வருகிறது. அவர்கள் போட்ட வழக்கின் காரணமாக தான் அம்மா அவர்கள் மனஉளைச்சலுக்கு ஆளாகி இறந்தார். அவரது இறப்புக்கு முக்கியக் காரணம் திமுக தான் 

> ஸ்டாலின் கூறுவது போல, அதிமுகவை பாஜகவிடம் அடகு வைக்கவில்லை. அது பாதுகாப்பு பெட்டகத்தில் பத்திரமாக வைத்துள்ளோம். அதிமுக தான் வெற்றி பெறப்போகிறது. 

> இந்தியாவின் பாதுகாப்பாளர் பிரதமர் மோடி, தமிழகத்தின் பாதுகாப்பாளர் முதல்வர் பழனிச்சாமி ஆவார்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.

Trending News