சிங்கப்பூரிலிருந்து திருச்சி வந்த நபருக்கு கொரோனா: ஓமிக்ரான் தொற்றா என பரிசோதனை

சிங்கப்பூரில் இருந்து திருச்சி வந்த நபருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இது ஒமிக்ரான் பாதிப்பா என கண்டறிய மரபணு பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Dec 3, 2021, 10:27 AM IST
சிங்கப்பூரிலிருந்து திருச்சி வந்த நபருக்கு கொரோனா: ஓமிக்ரான் தொற்றா என பரிசோதனை  title=

உலக மக்களை பாடாய் படுத்திய கொரோனா பெருந்தொற்று சற்று குறைந்து மக்கள் இப்போதுதான் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பத் தொடங்கினர். ஆனால், பின்னோடு வந்துவிட்டது ஓமிக்ரான் வைரஸ்!!

பல உலக நாடுகளில் இந்த தொற்று ஏற்கனவே பரவிவிட்ட நிலையில், நேற்று இந்தியாவிலும் இந்த தொற்று மாறுபாடு நுழைந்திவிட்டதாக, அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில், சிங்கப்பூரில் இருந்து திருச்சி வந்த நபருக்கு கொரோனா (Coronavirus)  பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இது ஒமிக்ரான் பாதிப்பா என கண்டறிய மரபணு பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது.

ஓமிக்ரான் மாறுபாடு முன்னர் இருந்த டெல்டா மாறுபாட்டை விட அதிக வீரியம் கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது. தென் ஆப்பிரிக்காவில் முதல் முறையாக கண்டுபிடிக்கப்பட்ட இந்த மாறுபாடு அதிக ஆபத்துக்கான மாறுபாடாகவும், விரைவில் பரவக்கூடியதகாவும் இருப்பதாக நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். 

ALSO READ:இந்தியாவிற்குள் நுழைந்த ஒமிக்ரான்; தென்னாப்பிரிக்காவில் இருந்து வந்தவர்களுக்கு தொற்று பாதிப்பு உறுதி 

ஓமிக்ரான் (Omicron) கொரோனா மாறுபாட்டை கையாள்வதற்கான நடவடிக்கைகளை மத்திய மாநில அரசுகள் வேகமாக எடுத்து வருகின்றன. ஒமிக்ரான் மாறுபாட்டை 3 மணி நேரத்திற்குள் கண்டறிய, அதற்கேற்ற ஆய்வக வசதிகளை சென்னை, கோவை உட்பட நான்கு நகரங்களில் தமிழக அரசு ஏற்படுத்தியுள்ளது. 

ஓமிக்ரான் வைரஸ் பரவலை தடுக்கும் வகையில் தமிழ்நாடு பொது சுகாதாரத்துறை பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துவருகிறது. முன்னதாக சென்னை, திருச்சி, மதுரை, கோவை உள்ளிட்ட சர்வதேச விமான நிலையங்களில் கண்காணிப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு சுகாதாரத்துறை அமைச்சர் மற்றும் அதிகாரிகள் நேற்று சென்னையை தவிர்த்து மற்ற விமான நிலையங்களில் ஆய்வு மேற்கொண்டனர்.  

ஹைரிஸ்க் என கண்டறியப்பட்டுள்ள  நாடுகளிலிருந்து (High Risk Countries) வரும் பயணிகள் அனைவருக்கும் RTPCR உள்ளிட்ட முழுமையான பரிசோதனை மேற்கொள்ளப்படும். பரிசோதனை முடிந்தும் வீட்டில் தனிமை படுத்திக்கொள்ள கண்காணிப்பில் இருப்பார்கள். அதேவேளையில் வெளிநாட்டில் இருந்து வரும் அனைத்து பயணிகளுக்கும் கோரானா பரிசோதனை கட்டயமாக்கப்பட்டிருக்கிறது.

திருச்சி விமான நிலையத்திற்கு நேற்று இரவு சிங்கப்பூரிலிருந்து வந்த விமானத்தில் 134- விமான பயணிகளுக்கு ஆர்.டி.பி.சி.ஆர். பரிசோதனை நடத்தப்பட்டது. அதில் சிங்கப்பூர் நாட்டைச் சேர்ந்த ஒருவருக்கு கோரானா பாதிப்பு இருந்ததை அடுத்து அவர் திருச்சியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

திருச்சி கி.ஏ.பெ விசுவனாதம் மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் கொரனோ தொற்றால் பாதிக்கபட்டவர் தனிமைப்படுத்தி வைக்கப்பட்டுள்ளார். அவரது உடல்நிலை சீராக உள்ளது. அவருக்கு ஓமிக்ரான் தோற்று உள்ளதா என கண்டறிய மாதிரிகள் சென்னைக்கு அனுப்பப்பட்டுள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து திருச்சி சுகாதாரத்துறை இணை இயக்குனர் சுப்பிரமணியன் கூறுகையில், ‘அவருக்கு ஒமிக்ரான் வகை கொரனோ தொற்றுத்தான் என்று உறுதியாகக் நாம்  கூற முடியாது. ஓமிக்ரான் அறிகுறிகள் மட்டுமே தென்படுவதாக நோயாளி தெரிவித்துள்ளளார்’ என்றார்.

சமீபத்திய தகவல்களின் படி, பிரிட்டனில் இருந்து சென்னை வந்த 10 வயது குழந்தைக்கும் கோரானா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

தயாராகிறது தமிழகம்

ஓமிக்ரான் வரைஸ் தொற்றுக்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, சென்னையில் உள்ள அரசு மருத்துவமனைகளில் 275 படுக்கைகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் கூறியுள்ளார். தமிழகத்தில் ஓமிக்ரானை எதிர்கொள்ளத் தேவையான மருந்துகள், ஆக்சிஜன் வசதிகள், முககவசங்கள் போன்றவை அடுத்த 3 மாதங்களுக்கு தேவையான அளவு கையிருப்பில் உள்ளதாகவும், ஓமிக்ரான் வைரஸ் தொற்று பாதிப்புக்குள்ளாகும் நபர்களை தனிமைப்படுத்தி கண்காணிக்கும் வகையில் தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளிலும் 150 படுக்கைள் ஒதுக்க மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அறிவுறுத்தியுள்ளது. அதன்படி சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையின் 4ஆவது தளத்தில் முதற்கட்டமாக 150 படுக்கைகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் 75 படுக்கைகளும், ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் 15 ஐ.சி.யு படுக்கைகள், 35 பொது படுக்கைகளும் என மொத்தமாக 275 படுக்கைகள் ஒமைக்ரான் வைரஸ் தொற்று பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்க தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. மேலும் தேவைப்பட்டால் கிண்டி கொரோனா மருத்துவமனை, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைகளில் ஓமிக்ரான் தொற்றுக்கு சிகிச்சை அளிக்க பயன்படுத்தி கொள்ள ஏற்பாடு செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ALSO READ:ஓமைக்ரான் வைரஸ்: விமான நிலயங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரம்! 

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.

Android Link: https://bit.ly/3hDyh4G

Apple Link: https://apple.co/3loQYeR

Trending News