வாகனப் பதிவினை எளிமையாக்க தமிழக அரசின் புதுத்திட்டம்!

வாகனம் சம்பந்தப்பட்ட அனைத்து பணிகளும் இணையதளம் மூலம் மனு செய்யும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டு அதற்கான கட்டணம் கணினி வழியாக செலுத்தும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Sep 30, 2018, 11:26 AM IST
வாகனப் பதிவினை எளிமையாக்க தமிழக அரசின் புதுத்திட்டம்! title=

வாகனம் சம்பந்தப்பட்ட அனைத்து பணிகளும் இணையதளம் மூலம் மனு செய்யும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டு அதற்கான கட்டணம் கணினி வழியாக செலுத்தும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.

இதுகுறித்து தமிழக அரசு சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திகுறிப்பில் குறிப்பிட்டுள்ளதாவது...

"கடந்த 2012-ஆம் ஆண்டு முதல் வாகனங்களுக்கான பதிவுக் கட்டணம் மற்றும் வரி இணையதளம் மூலம் செலுத்தும் வசதி செய்யப்பட்டு நடைமுறையில் உள்ளது. இதன் தொடர்ச்சியாக வாகனம் சம்பந்தப்பட்ட அனைத்து பணிகளும் அதாவது பெயர் மாற்றம் செய்தல், உரிமம் மாற்றம் செய்தல், தவணைக் கொள்முதல் மற்றும் தவணை இரத்து செய்தல் போன்ற அனைத்து பணிகளும் இணையதளம் மூலம் மனு செய்யும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டு அதற்கான கட்டணம் கணினி வழியாக செலுத்தும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.

01.03.2017 முதல் அனைத்து வட்டாரப் போக்குவரத்து அலுவலகங்கள் (RTO)) மற்றும் பகுதி அலுவலகங்களில், ஓட்டுநர் உரிமம் சம்பந்தப்பட்ட அனைத்துப் பணிகளும் இணையதளம் மூலம் ["சாரதி" (பெயர்ப்பு-4) மென்பொருள்] விண்ணப்பிக்கப்பட்டு ஓட்டுநர் உரிமங்கள் வழங்கப்பட்டு வருகின்றன. தற்போது, விண்ணப்பதாரர் அதற்குரிய கட்டணத்தை மட்டும் வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்திற்கு நேரடியாக சென்று செலுத்தி வருகின்றனர். வரும் 01.10.2018 முதல் ஓட்டுநர் உரிமம் சம்பந்தப்பட்ட அனைத்துப் பணிகளுக்கான, (அதாவது பழகுநர் உரிமம், நிரந்தர ஓட்டுநர் உரிமம், ஓட்டுநர் உரிமம் முகவரி மாற்றம் செய்தல், நகல் ஓட்டுநர் உரிமம் பெறுதல்) கட்டணம் முழுவதுமாக மனுதாரர்கள் தங்கள் இருப்பிடத்திலிருந்து செயல்படுத்தும் வசதி மாண்புமிகு போக்குவரத்து துறை அமைச்சர் அவர்களால் துவங்கப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. மனுதாரர்கள் (1) நேரடியாக https://parivahan.gov.in/parivahan/ இணைய தளம் மூலம் விண்ணப்பித்து அதற்கான தொகையை online மூலம் செலுத்தி பயன் பெறலாம். (2) அங்கீகரிக்கப்பட்ட ஓட்டுநர் பயிற்சிப் பள்ளிகள் மூலமாகவும் விண்ணப்பிக்கலாம். online மனுவை பூர்த்தி செய்த பிறகு, அதற்கான கட்டணத்தையும் online-ல் கீழ்கண்டவாறு பண பரிவர்த்தனை செய்யலாம். 

(1) வங்கி இணைய சேவை (2) டெபிட் கார்டு அல்லது கிரடிட் கார்டு மூலமாக (3) விண்ணப்பத்திற்கு செலுத்த வேண்டிய தொகையை இணையதளம் மூலம் இரசீதை உருவாக்கி அதை அருகிலுள்ள பாரத ஸ்டேட் வங்கியில் செலுத்தலாம். செலுத்திய பின்பு ஒப்புகை சீட்டை அல்லது பணம் கட்டிய இரசீதுடன் வட்டாரப் போக்குவரத்து அலுவலகம் மற்றும் மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலகத்திற்குச் சென்று தகுந்த test-ல் கலந்து கொண்டு, புகைப்படம் எடுத்து உரிமத்தினை பெற்றுக் கொள்ளலாம். 

இதன் மூலம், மனுதாரர்கள் அலுவலகத்திற்கு வந்து பணம் செலுத்துவதால் கால விரயமும், பொதுமக்கள் அலுவலகங்களில் காத்திருப்பதும் குறைக்கப்படுகிறது. மேலும், அவர்கள் இருப்பிடத்திலிருந்தே மனு செய்தால் 24 மணி நேரமும் வங்கி வழியாக பணம் செலுத்துவதன் மூலம், பொதுமக்களுக்கு மிகவும் சுலபமாக அவர்களுடைய ஓய்வு நேரத்திலே கட்டணம் செலுத்தி பயன்பெறலாம். இந்தத் திட்டத்தினால், அலுவலக பணியாளர்களுக்கு பணிச்சுமை குறைந்து, இதர பணிகளில் கவனம் செலுத்தி பொதுமக்களுக்கு சிறப்பாக சேவையாற்ற முடியும்.  போக்குவரத்து துறையின் படிப்படியான முன்னேற்றத்தில் இது ஒரு மைல்கல் ஆகும். இதேபோன்றே, வட்டாரப் போக்குவரத்து அலுவலகப் பணிகள் அனைத்தும் படிப்படியாக ரொக்கமில்லா பரிவர்த்தனை செய்யவும் மற்றசேவைகள் அனைத்தும் online-ல் பெற திட்டமிடப்பட்டுள்ளது." என குறிப்பிடப்பட்டுள்ளது!

Trending News