தலைக்கேறிய போதை.! தள்ளாடிய கால்கள்! சாலையில் நடுவே பயங்கரம்

கேரளாவில் மதுக்கடை ‘பார்’-ல் இருந்து போதை தலைக்கேறி வெளியே வந்த நபர் மீது சரமாரியாக வாகனங்கள் ஏறியதில் சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்தார்.  

Written by - நவீன் டேரியஸ் | Last Updated : Mar 17, 2022, 03:49 PM IST
  • தலைக்கேறிய போதையால் நேர்ந்த விபரீதம்
  • நடுச்சாலையில் போதையில் படுத்த ஆசாமி
  • அதிர்ச்சியில் உறைய வைக்கும் சிசிடிவி காட்சி
தலைக்கேறிய போதை.! தள்ளாடிய கால்கள்! சாலையில் நடுவே பயங்கரம்  title=

பணம் பத்தும் செய்யும் என்பார்கள். போதை நூறு செய்யும் போல.! திருமண நிகழ்ச்சிகள், துக்க நிகழ்ச்சிகள் தொடங்கி இயல்பான சம்பவம் வரை நடைபெறும் சிறிய வன்முறைக் கூட ‘பெரும்பாலும்’ தலைக்கேறும் அளவுக்கு குடித்த மதுப்பிரியர்களால்தான் அரங்கேறுகிறது. குடிப்பவர்களால் மட்டும்தான் பிரச்சனை ஏற்படுகிறதா என்ற ‘கேட்டகிரி’ வகை கேள்விக்கு இப்போதைக்கு செல்ல வேண்டாம். ‘குடிச்சா கம்முனு படுக்க மாட்டியா’ என்ற யதார்த்தமான அதட்டல் சொற்களை, தமிழ்நாட்டின் ஒவ்வொரு இரவிலும் எங்கோ ஒரு மூலையில் எதோவொரு மதுப்பிரியரிடம் அவரது குடும்பம் கேட்டுக்கொண்டுதான் இருக்கிறது. 

மேலும் படிக்க | Watch: மது கொடுக்காததால் ஏர் இந்தியா ஊழியரை கழுவி ஊற்றிய பெண்....

போதை ஒருவரை எதுவரை இட்டுச்செல்லும் ? கொலை, கொள்ளை, தற்கொலை என வன்முறை வழிகள் ஒரு பிரிவு என்றால், போதையில் செய்வதறியாது எதாவது அசம்பாவிதங்களில் சிக்கிக் கொள்ளும் அல்லது பிறரை சிக்க வைக்கும் ரகம் இரண்டாவது வகை. முதல் வகையை விடுங்கள். இந்த இரண்டாவது வகை ஆசாமிகள்தான் நிதானமில்லாமல் குடித்துவிட்டு நடனம் ஆடுவது, சாக்கடைகளில் உறங்குவது, ஒட்டுத்துணியில்லாமல் அலப்பறை செய்வது, இன்னும் இத்யாதி...இத்யாதி....!. ஆனால், இதே நபர்கள் காலையில் வெகு இயல்பாக நடந்துகொள்வார்கள். நிறைபோதையில் இருக்கும்போதும், மறுநாள் காலையில் இயல்பாக தோற்றமளிக்கும் அந்த நபருக்கும் இடையிலான உளவியல் பிரச்சனை அவ்வளவு உண்டு. முழு போதையில் தள்ளாடும் அவர்களை, நகைச்சுவைக்கான அசைவுகளாகவே பார்த்து பழகி இருக்கிறோம். தலைக்கேறிய போதையில் மதுப்பிரியர்கள் செய்யும் அசட்டுத்தனமான காரியங்களைக்கூட வேறுவழியின்றி சகித்துக்கொள்கிறோம் அல்லது கடந்துசெல்கிறோம். இந்த போதையின் வீரியம் அசம்பாவிதமாக மாறினால் ? அதன் மூலம் ‘உயிரே’ போனால் ?

மேலும் படிக்க | ரூ.10000 அபராதம் விதித்த டிராஃபிக் போலீஸ்! ஆத்திரத்தில் தீக்குளித்த வாலிபர்!

கேரள மாநிலம் கொல்லம் சாஸ்தான்கோட்டை நெடுஞ்சாலையில், பரணிக்காவு பகுதியில் அமைந்துள்ள தனியார் மதுபான கடை ஒன்றில் மது பிரியர் ஒருவர்  மது குடிக்கச்  சென்றுள்ளார். அந்தக் கடையில் இருந்து வெளியே வரும்போது அவர் முழுபோதையில் தள்ளாடியபடியே வந்துள்ளார். வீட்டிற்குகூட செல்ல முடியாமல் பிறர்மீது மோதியும், உராய்ந்தும் வந்ததால் அங்கிருந்த காவலர்கள் மதுப்பிரியரை வெளியேற்றியுள்ளனர். கால்கள் தள்ளாடியபடி சாலைக்குச் சென்ற அவர், வேகமாக வரும் வாகனங்களுக்கு இடையூறாக நின்று நடுரோட்டில் சேட்டை செய்தார். ஒருகட்டத்தில் நிற்க முடியாமல் சாலையில் நடுவே ‘பொத்’தென கீழே விழுந்தார். அப்போது அந்த சாலையில் வேகமாக வந்த சொகுசு கார் ஒன்று அந்த நபர் மீது படுவேகமாக ஏறி இறங்கியது. சாலையில் ஒருவர் படுத்துக்கிடக்கிறார் என்பது தெரியாமல் அடுத்தடுத்து வந்த வாகனங்கள் அந்த நபரின் மீது ஏறி இறங்கியது. இதில் அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். விசாரணையில் அந்த மதுப்பிரியர், அதேப் பகுதியைச் சேர்ந்த நிசாம் என்பது தெரியவந்தது. இந்தக் காட்சிகள் அங்குள்ள சிசிடிவி காட்சிகளில் பதிவாகியுள்ளது. 

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews மற்றும் டிவிட்டரில் @ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

 

Trending News