எனது வாழ்க்கை சினிமாவாக உருவாகுவதில் மகிழ்ச்சி- மாரியப்பன்

Last Updated : Jan 3, 2017, 04:06 PM IST
எனது வாழ்க்கை சினிமாவாக உருவாகுவதில் மகிழ்ச்சி- மாரியப்பன்  title=

தமிழகத்தை சேர்ந்த மாரியப்பன் தங்கவேலு பாரா ஒலிம்பிக் உயரம் தாண்டுதலில் தங்கப் பதக்கம் வென்று வரலாற்று சாதனை படைத்தார். இந்தியாவுக்கும், தமிழகத்துக்கும் பெருமையை சேர்த்தார்.

தற்போது இவரின் வாழ்க்கை சினிமா படமாக தயாராகிறது. இந்த படத்தை ஐஸ்வர்யா தனுஷ் இயக்குகிறார். தமிழ் மற்றும் ஆங்கிலம் என இரண்டு மொழிகளில் உருவாகுகிறது. இந்தப் படத்துக்கான பர்ஸ்ட் லுக் போஸ்டரை புத்தாண்டையொட்டி இந்தி நடிகர் ஷாருக்கான் வெளியிட்டார்.

இதற்காக அவர் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பே மாரியப்பனை சந்தித்து, அவரது அனுபவங்களை சேகரித்து பதிவு செய்திருக்கிறார். இந்தப் படத்தில் மாரியப்பன் தங்கவேலு கதாபாத்திரத்தில் நடிக்கப்போகும் நடிகருக்கான தேர்வு நடக்கிறது.

இதைக்குறித்து மாரியப்பன் தங்கவேலு கூறியதாவது:

எனது வாழ்க்கையை தழுவி எடுக்கப்படும் இந்தப் படம் கிராமப்புற பின்னணியில் வளர்ந்த இளைஞர்களை ஈர்க்குமானால், அதைவிட மகிழ்ச்சி அளிக்கும் விஷயம் வேறெதுவும் இருக்க முடியாது. எனினும், இதுதொடர்பாக அதிகாரப்பூர்வமான ஒப்பந்தத்தில் நான் இன்னும் கையொப்பமிடவில்லை.

இந்தப் படத்துக்கான நடிகர்களை தேர்வு செய்யும் பொறுப்பை படக்குழுவினரிடமே ஒப்படைக்க விரும்புகிறேன். எனது கதாபாத்திரத்தில் யார் நடிக்கிறார்கள்? என்பது முக்கியமல்ல. கதை மட்டுமே முக்கியம். இதனால் மக்கள் ஈர்க்கப்பட வேண்டும். இந்தப் படத்துக்கு பிறகு, விளையாட்டு துறையை மையப்படுத்தி நிறைய திரைப்படங்கள் தயாரிக்கப்பட வேண்டும் என்பதே என் விருப்பமாகும் என கூறினார்.

 

 

Trending News