PMK Ramadoss - Anbumani Issue Latest News Updates: பாட்டாளி மக்கள் கட்சியின் புத்தாண்டு சிறப்பு பொதுக்குழு கூட்டம் பட்டானுர் தனியார் திருமண மண்டபத்தில் இன்று (டிச. 28) நடைபெற்றது. இதில் மருத்துவர் ராமதாஸ் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் உள்ளிட்ட நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர்.
அங்கு பாமக தலைவர் அன்புமணி மற்றும் நிறுவனர் ராமதாஸ் இடையே மேடையிலேயே கடும் மோதல் ஏற்பட்டது. பாமகவின் இளைஞர் அணி தலைவராக முகுந்தன் என்பவரை ராமதாஸ் நியமனம் செய்ததற்கு அன்புமணி எதிர்ப்பு தெரிவித்துள்ளார். ராமதாஸின் மகள் வழி பேரன்தான் இந்த முகுந்தன் என்பதும் குறிப்பிடத்தக்கது.
ராமதாஸ் vs அன்புமணி
கட்சியில் சேர்ந்த 4 மாதங்களுக்குள் முகுந்தனுக்கு பதவி எதற்கு என அன்புமணி கேட்டதற்கு ராமதாஸ் ஆவேசமாக மேடையிலேயே கருத்து தெரிவித்தார்."நான் உருவாக்கிய கட்சி இங்கு நான்தான் முடிவெடுப்பேன்" என்று அன்புமணியை நோக்கி பார்த்து ராமதாஸ் ஆவேசமாக பேசினார். தொடர்ந்து,"கட்சியை உருவாக்கியவன் நான். வன்னியர் சங்கத்தை உருவாக்கியவன் நான். முடிவை நான் தான் எடுப்பேன்" என ராமதாஸ் அதிரடியாக பேசினார். கட்சியில் இணைந்த சில மாதங்களிலேயே பொறுப்புகள் வழங்கப்படுவதாக அன்புமணி எதிர்ப்பு தெரிவித்தார்.
"நான் எடுத்த முடிவுதான் கட்சியின் முடிவு. விருப்பம் இல்லாதவர்கள், எனது பேச்சை கேட்காதவர்கள் யாராக இருந்தாலும் கட்சியில் இருந்து விலகிக்கொள்ளுங்கள்" என ராமதாஸ், அன்புமணிக்கு மேடையிலேயே அதிரடியாக தெரிவித்தார். பனையூரில் புதிதாக கட்டி உள்ள தனது அலுவலகத்தில் இனி தொண்டர்கள் தன்னை சந்திக்கலாம் என அன்புமணி ராமதாஸ் தொண்டர்களிடம் பேசினார்.
யார் இந்த முகுந்தன் பரசுராமன்?
பாமக புத்தாண்டு பொதுக்குழுவில் கட்சியின் புதிய இளைஞரணி தலைவராக நியமிக்கப்பட்ட முகுந்தன் குறித்த தகவல் தற்போது வெளியானது. பாமக நிறுவனர் ராமதாஸின் மூத்த மகள் காந்திமதியின் மகன்தான் முகுந்தன் ஆவார். முன்னதாக பாமக கௌரவத் தலைவர் ஜி.கே.மணியின் மகன் தமிழ்குமரன் இளைஞரணி தலைவராக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. தமிழ்குமரன் பதவி விலகிய நிலையில் புதிய தலைவராக முகுந்தன் என ராமதாஸ் அறிவித்ததால் அன்புமணி- ராமதாஸ் இடையே வார்த்தை மோதல் ஏற்பட்டுள்ளது.
கட்சிக்கு வந்து நான்கு மாதங்களே ஆகும் நிலையில், அவருக்கு பொறுப்பு வழங்குவதற்கு அன்புமணி எதிர்ப்பு தெரிவித்தார். மேலும், குடும்பத்தில் இருந்தே நிர்வாகிகள் வருவதாகவும், களத்தில் இருந்து நல்ல நிர்வாகிகள் தேர்வு செய்ய வேண்டும் எனவும் அன்புமணி மேடையிலேயே பேசினார். குறிப்பாக, அன்புமணிக்கு உதவியாக முகுந்தன் இருப்பார் என கூறப்பட்ட நிலையில், எனக்கு அவர் வேண்டாம் என மேடையிலேயே மறுத்தார் அன்புமணி...
முகுந்தன் ஊடகபேரவை மாநில செயலாளராகவும் இருக்கிறார். இதை அன்புமணி எதிர்த்தபோது "உன் மகள் அரசியலுக்கு வரலாம், என் மகளின் மகன் வரக்கூடாதா" என கேட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. இது கட்சியில் மட்டுமின்றி தமிழ்நாடு அரசியலிலேயே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வரும் சட்டப்பேரவை தேர்தலில் பாமகவில் இது கடும் தாக்கத்தை ஏற்படுத்தும்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ