மத்திய அரசின் முடிவு ஜனநாயகத்திற்கு எதிரானது -தம்பிதுரை

Last Updated : Oct 4, 2016, 01:41 PM IST
மத்திய அரசின் முடிவு ஜனநாயகத்திற்கு எதிரானது -தம்பிதுரை  title=

சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் கடந்த 30-ம் தேதி மத்திய அரசுக்கு காவிரி மேலாண்மை வாரியம் வரும் 4-ம் தேதிக்குள் அமைக்க உத்தரவிட்டது. ஆனால் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க முடியாது என மத்திய அரசு தற்போது கூறியுள்ளது.

கர்நாடகா மாநிலம் காவிரி தண்ணீர் திறந்து விடுவதை உறுதி செய்யவும், காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது பற்றி ஆலோசனை செய்யவும் பிரதமரை நேரில் சந்தித்து வலியுறுத்த அதிமுக கட்சியை சேர்ந்த மக்களவை மற்றும் மாநிலங்களவை எம்.பி.,க்கள் அனைவரும் டில்லிக்கு சென்று பிரதமர் மோடியை இன்று சந்திக்க திட்டமிட்டனர்.

அதற்காக அ.தி.மு.க எம்பி.க்கள் துணை சபாநாயகர் தம்பிதுரை தலைமையில் பாராளுமன்ற வளாகத்தில் இருந்து பிரதமர் அலுவலகம் நோக்கி ஊர்வலமாக சென்றனர். அங்கு பிரதமர் இல்லை. அதிம.க எம்பிக்கள் உள்ளே செல்ல அனுமதிக்க வில்லை. இதனால் பாதுகாப்பு அதிகாரிகளுடன் அதிமுக எம்.பிக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அதிமுக எம்.பிக்கள் சந்திக்க அனுமதிக்க கோரி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் தம்பிதுரை தலைமையில் 5 எம்.பிக்கள் பிரதமர் செயலாளரை சந்தித்து மனு அளித்தனர்.

பின்னர் தம்பிதுரை செய்தியாளர்களிடம் பேசுகையில்:- முதலில் காவிரி வழக்கு விசாரணையின் போது, காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க ஒப்புக்கொண்ட மத்திய அரசு பின்னர் தங்கள் முடிவை திரும்ப பெற்றுக்கொண்டது. மத்திய அரசின் இந்த முடிவு ஜனநாயகத்திற்கு எதிரானது. இந்த மனுவை மத்திய அரசு திரும்ப பெற வேண்டும். காவிரி மேலாண்மை வாரியத்தை உடனடியாக அமைக்க வேண்டும். பிரதமரை சந்திக்க இயலவில்லை அதனால் மனுவை பிரதமர் அலுவலக செயலாளர்கள் பெற்றுக்கொண்டனர். உமாபாரதியையும் காவிரி விவகாரத்தில் சந்தித்துள்ளோம். இந்த விவகாரத்தில் அரசியல் செய்வது சரியல்ல. அடுத்த கட்ட நடவடிக்கை பற்றி முதல்வர் முடிவு செய்வார் என அவர் கூறினார்.

 

 

Trending News