பழமையான கோவில்களின் புணரமைப்பில் ‘அலட்சியம்’ வேண்டாமே!

பழமையான கோவில்களை சிறப்பாக பாதுகாக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.  

Written by - நவீன் டேரியஸ் | Last Updated : Mar 18, 2022, 07:25 PM IST
  • கோவில் புரணமைப்பு பணியில் அலட்சியமா ?
  • பழமையான சிலைகள் முறையாக கையாளப்படவில்லை என குற்றச்சாட்டு
  • சிலைகளுக்கு பெயிண்ட், வெள்ளை அடித்துவிடப்படுவதாக வேதனை
பழமையான கோவில்களின் புணரமைப்பில் ‘அலட்சியம்’ வேண்டாமே! title=

நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்தினாலும் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட கோவில்களை போல உருவாக்க முடியாது என்பதை கருத்தில்கொண்டு, பழமையான கோவில்களை பாதுகாக்க வேண்டுமென சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
தொன்மைகளைப் பாதுகாப்பது என்பது ஒரு வரலாற்றைப் பாதுகாப்பதற்குச் சமம். பண்பாட்டு ரீதியாக போர் மற்றும் பல படையெடுப்புகளுக்குப் பின் தமிழகத்தில் மிச்சமிருக்கும் பண்பாட்டுத் தொன்மங்களை எப்படிப் பாதுகாக்கப் போகிறோம் என்பதே நம்முன் உள்ள சவால். குறிப்பாக, பெரும்பாலான கோவில்களில் பராமரிப்பு விவகாரத்தில் அறநிலையத்துறையின் ஈடுபாடுகள் என்ன ?. ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய பழமையான கோவில்களை புணரமைக்கிறோம் என்ற பெயரில் கோவிலின் வரலாறும், முக்கியத்துவமும் தெரியாத பணியாளர்கள் சிலர் செய்யும் செயல்கள் வருத்தமளிப்பதாக தொல்ப்பொருள் ஆய்வாளர்கள் வேதனை தெரிவித்து வருகின்றனர். சமீபத்தில் கோவில் புணரமைப்பில் செய்யப்பட்ட பிழைகள் குறித்து புகார்கள் எழுந்த வண்ணம் இருந்த நிலையில், தற்போது நீதிமன்றம்வரை இந்த விவகாரம் சென்றிருக்கிறது. இதுதொடர்பான கோரிக்கை மனுக்களை சென்னை உயர்நீதிமன்றம் விசாரித்து வருகிறது. இந்நிலையில் ரங்கராஜன் நரசிம்மன் என்பவர் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு ஒன்றைத் தொடர்ந்தார். அதில் சுசீந்திரம் தாணுமாலய கோவில் புணரமைப்புப் பணியின் போது, கோவிலின் ஓவியங்கள் அழிக்கப்பட்டு வெள்ளையடிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். ஓவியங்களின் மதிப்பு தெரியாமல் இதுபோன்று பணியாளர்கள் ஈடுபடுவது பல கோவில்களில் அதிகரித்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இதேபோல், நாமக்கல் சோளீஸ்வரர் கோவிலின் பழமையான கற்கள் உடைக்கப்பட்டிருப்பதாகவும், திருவெள்ளாறை கோவிலும் சேதப்படுத்தப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். 

மேலும் படிக்க | கோயில்களில் திருடப்பட்ட 11ம் நூற்றாண்டை சேர்ந்த சிலைகள் மீட்பு! 

இந்த வழக்கு நீதிபதிகள் ஆர்.மகாதேவன் மற்றும் பி.டி.ஆதிகேசவலு ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. இந்த விவகாரத்தில் அறநிலையத்துறை சார்பில் ஆஜரான வழக்கறிஞர், புகார்தாரர் அளித்த குற்றச்சாட்டுகள் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும், ஈரோட்டில் உள்ள கோவில் ஒன்றின் பொங்கல் மண்டபம் இடிக்கப்பட்ட விவகாரத்தில் கோவிலின் செயல் அலுவலர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், தற்போதுள்ள நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்தினாலும், ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட கோவல்களைப் போல அற்புதமான கட்டுமானத்துடனும், சிறந்த தொழில்நுட்பத்துடனும், முறையான ஆகம விதிப்படியும் கட்டமுடியாது என்று தெரிவித்தனர். அதனால் பழமையான  கோவில்களை முறையாக புணரமைத்து, சிறப்பாக பாதுகாக்க வேண்டும் என்றும் நீதிபதிகள் அறிவுறுத்தினர். 
இதையடுத்து, மனுதாரரின் புகார்கள் தொடர்பான புகைப்படங்கள் மற்றும் ஆவணங்களை தாக்கல் செய்ய உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை இரண்டு வாரங்களுக்கு தள்ளிவைத்தனர்.

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

Trending News