ஜனநாயகத்தை காக்கக்கூடிய வகையில் உச்சநீதிமன்ற தீர்ப்பு... ஸ்டாலின்!

தமிழக உள்ளாட்சி தேர்தல் குறித்த உச்சநீதிமன்ற தீர்ப்பு ஜனநாயகத்தை காக்கக்கூடிய வகையில் அமைந்திருப்பதாக திமுக தலைவர் முக ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

Last Updated : Dec 6, 2019, 12:26 PM IST
  • புதிதாக பிரிக்கப்பட்ட 9 மாவட்டங்கள் (நெல்லை, தென்காசி, விழுப்புரம், கள்ளகுறிச்சி, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர்) தவிர்த்து மற்ற மாவட்டங்களில் உள்ளாட்சித் தேர்தல் நடத்த உச்சநீதிமன்றம் அனுமதி
  • குறித்த இந்த 9 மாவட்டங்களில் 4 மாதத்திற்குள் தொகுதி மறுவரையறை செய்து தேர்தல் நடத்த வேண்டும் எனவும் உச்சநீதிமன்றம் தனது தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளது.
ஜனநாயகத்தை காக்கக்கூடிய வகையில் உச்சநீதிமன்ற தீர்ப்பு... ஸ்டாலின்! title=

தமிழக உள்ளாட்சி தேர்தல் குறித்த உச்சநீதிமன்ற தீர்ப்பு ஜனநாயகத்தை காக்கக்கூடிய வகையில் அமைந்திருப்பதாக திமுக தலைவர் முக ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இகுறித்து அவர் தெரிவிக்கையில்., ஜனநாயகத்தை காக்கக்கூடிய வகையில் உச்சநீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பு அமைந்துள்ளது, இதை நான் வரவேற்கிறேன் என குறிப்பிட்டுள்ளார்.

முன்னதாக., தமிழகத்தில் கிராமப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு வருகிற 27 மற்றும் 30 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக தேர்தல் நடத்தப்படும் என தேர்தல் ஆணையம் அறிவித்தது. வேட்புமனுத் தாக்கல் இன்று தொடங்க உள்ள நிலையில், உள்ளாட்சித் தேர்தல் அறிவிப்பை ரத்து செய்யக்கோரி உச்ச நீதிமன்றத்தில் திமுக தரப்பில் புதிய மனு தாக்கல் செய்யப்பட்டது.

அதில், வார்டு மறுவரையறை முழுமையாக நிறைவடையும் வரை தேர்தல் நடத்த தடை விதிக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது. திமுகவின் புதிய மனு மற்றும், 5 புதிய மாவட்டங்களின் வாக்காளர்கள் தாக்கல் செய்த மனுக்கள் மீதான விசாரணை நேற்று நடைபெற்றது. அப்போது உரிய சட்ட முறைகளை கடைபிடிக்காமல் உள்ளாட்சித் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளதாக திமுக தரப்பு வழக்கறிஞர் வாதிட்டார். 2011 மக்கள்தொகை கணக்கெடுப்பு அடிப்படையில் வார்டு மறுவரையறை பணிகள் மேற்கொள்ளப்பட்டதாகவும், புதிய மாவட்டங்கள் உருவாக்கப்பட்ட பின் அவற்றில் தொகுதி மறுவரையறை செய்ய தேவையில்லை என்றும் மாநில தேர்தல் ஆணையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

தொகுதி மறுவரையறை தேவையில்லை என்ற வாதத்தை ஏற்க முடியாது என்று கூறிய நீதிபதிகள், பழைய நிலையே தொடரும் என்றால் மூன்று மாவட்டங்களுக்கு ஒரே மாவட்ட பஞ்சாயத்தா? என்று அடுக்கடுக்கான கேள்விகளை முன்வைத்தனர். தேர்தல் அறிவிக்கப்பட்டு நடத்தை விதிகள் நடைமுறைக்கு வந்தபிறகு நீதிமன்றத்தினால் தேர்தலை ரத்து செய்ய முடியாது என்ற நீதிபதிகள், தேவைப்பட்டால் உள்ளாட்சித் தேர்தலை நிறுத்தி வைக்க முடியும் என்றனர். இதற்கு பதிலளித்த தமிழக அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் தொகுதி மறுவரையறை செய்யப்படவில்லை என நினைத்தால் பிரிக்கப்பட்ட 9 மாவட்டங்களில் மட்டும் தேர்தலை தள்ளிவையுங்கள் என்றார்.

இதையடுத்து 9 மாவட்டங்கள் தவிர, மற்ற மாவட்டங்களில், ஊரக உள்ளாட்சித் தேர்தலை நடத்த தயாராக இருப்பதாக, தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் உறுதியளித்தது. இதற்கு, திமுக தரப்பில் கடும் ஆட்சேபம் தெரிவிக்கப்பட்டது. இருதரப்பு வாதங்களையும், கேட்ட நீதிபதிகள், வழக்கின் தீர்ப்பை ஒத்திவைத்தனர். அந்த வழக்கு இன்று காலை 10.30 மணியளவில் விசாரணை செய்து தீர்ப்பை வழங்கியுள்ளது உச்சநீதிமன்‌றம். 

அதில், புதிதாக பிரிக்கப்பட்ட 9 மாவட்டங்கள் (நெல்லை, தென்காசி, விழுப்புரம், கள்ளகுறிச்சி, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர்) தவிர்த்து மற்ற மாவட்டங்களில் உள்ளாட்சித் தேர்தல் நடத்த உச்சநீதிமன்றம் அனுமதித்துள்ளது. மேலும் குறித்த இந்த 9 மாவட்டங்களில் 4 மாதத்திற்குள் தொகுதி மறுவரையறை செய்து தேர்தல் நடத்த வேண்டும் எனவும் உச்சநீதிமன்றம் தனது தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளது.

இந்நிலையில் தற்போது உச்சநீதிமன்ற தீர்ப்பு குறித்து தனது கருத்தினை பதிவு செய்துள்ள திமுக தலைவரு முக ஸ்டாலின் தெரிவிக்கையில்., உச்சநீதிமன்ற தீர்ப்பு ஜனநாயகத்தை காக்கக்கூடிய வகையில் அமைந்துள்ளது என குறிப்பிட்டுள்ளார்.

Trending News