இது இந்தியா, ‘இந்தி’யா அல்ல... ஷா கருத்துக்கு ஸ்டாலின் கண்டனம்..!

தேசத்திற்கே ஒரே மொழியாக இந்தி இருக்க வேண்டும் என்ற கருத்துக்கு திமுக தலைவர் முக.ஸ்டாலின் கடும் கண்டனம்!!

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Sep 14, 2019, 02:02 PM IST
இது இந்தியா, ‘இந்தி’யா அல்ல... ஷா கருத்துக்கு ஸ்டாலின் கண்டனம்..!  title=

தேசத்திற்கே ஒரே மொழியாக இந்தி இருக்க வேண்டும் என்ற கருத்துக்கு திமுக தலைவர் முக.ஸ்டாலின் கடும் கண்டனம்!!

உள்துறை அமைச்சர் அமித் ஷா அதிக மக்களால் பரவலாக பேசப்படும் இந்தி தான் இந்தியாவை ஒற்றுமையாக வைத்திருக்கக்கூடிய மொழி என்ற கருத்துக்கு பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், "இந்தி தான் இந்தியாவின் ஒருமைப்பாட்டுக்கு உகந்த மொழி என அமித்ஷா அவர்கள் கூறியுள்ள கருத்தை திரும்பப் பெற வேண்டும் என திமுக தலைவர் முக.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 

மேலும், இது இந்தியா.‘இந்தி’யா அல்ல என எச்சரிக்கும் அதேவேளையில் பிரதமர் மோடி அவர்கள் இதுகுறித்த தன்னுடைய நிலையை தெளிவுபடுத்த வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன்" என கோரிக்கை விடுத்துள்ளார். 

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாவது;  இந்தியாவா? ‘இந்தி-யாவா?’ உள்துறை அமைச்சர் தமது கருத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்ற தலைப்பின் கீழ்...  நமது அரசியலமைப்பு சட்டத்தின் தொடக்கத்திலேயே இந்தியா என்பது மாநிலங்களின் ஒன்றியம் என தெளிவாக வரையறுக்கப்பட்டுள்ளது. வேறுபாடுகள் நிறைந்த மாநிலங்கள் ஒன்றி இணைந்திருக்கும் இந்த பன்முகத்தன்மைதான் இந்தியாவின் மிகப்பெரிய வலிமை. 'வேற்றுமையில் ஒன்றுமை' என்பதே இந்தியாவின் பண்பாட்டு அடையாளம். பல்வேறு காரணங்களின் அடிப்படையிலான உள்நோக்கத்துடன், இந்த அடையாளத்தை சிதைத்து அளித்திடும் நடவடிக்கைகளை மத்தியில் பாஜக அரசு அமைந்த நாள் முதலே மேற்கொண்டு வருகிறது. 

அதன் தொடர்ச்சியாக உள்துறை அமைச்சர் அமித்ஷா அவர்கள். "நாடு முழுமைக்கு ஒரு மொழி என்பது மிகவும் அவசியம். அதுதான் உலக அளவில் இந்தியாவிற்கான அடையாளத்தை தரும். அதிக மக்களால் பேசப்படும் இந்தி மொழிதான் அந்த அடையாலத்திற்குரிய மொழி" என கருத்து வெளியிட்டிருப்பது இந்தியாவில் பெரும்பான்மையாக உள்ள இந்தி பேசாத மக்கள் அனைவரையும் 'இரண்டாம் தர குடிமக்களாக்கும்' முயற்சியாகவே தெரிகிறது. 

அதிகம் பேசப்படுவது இந்தி என்பதால் அதுதான் தேசிய மொழி என்றால், இந்தியாவில் அதிகம் பறக்கும் காக்கை தானே இந்தியாவின் தேசிய பறவையாக இருந்திருக்க வேண்டும் என அன்றே கேட்டவர் நம் திமுகவின் நிறுவனர் பேரறிஞர் அண்ணா அவர்கள். அன்று துவங்கி இன்று வரை இந்தி ஆதிக்கத்தை எதிர்த்து, தாய்த் தமிழைக் காத்து, பிற மாநில மொழிகளுக்கும் அரணாக விளங்கி வருகிறது திமுக. 

அரசமைப்பு சட்டத்தின் எட்டாவது அட்டவணையில் உள்ள அனைத்து மொழிகளுக்கும் சமத்துவத்துடன் பேணப்படவேண்டிய நிலையில், அதில் ஒரு மொழியாக இந்தி மட்டுமே இந்தியாவின் அடையாளம் என்ற வகையில், இந்திய ஒருமைப்பாட்டிற்கு ஊறு விளைவிக்கும் வகையில், நாட்டின் உள்துறை அமைச்சரே தன் கருத்தை வெளியிட்டிருப்பது வேதநிக்குரியது மட்டும் அல்ல; கடும் கண்டனத்திற்குரியதுமாகும். 

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா அவர்கள் தனது கருத்தை மறுபரிசீலனை செய்வது, இந்தியாவின் இறையாண்மைக்கும் ஒருமைப்பாட்டிற்கும் உகந்ததாக இருக்கும் எனக் கருதுகிறேன். எனவே, அந்தக் கருத்தைத் திரும்பப் பெற வேண்டும் என வலியுறுத்துகிறேன். பிரதமர் மோடி அவர்களும் இது கூர்த்து தன்னுடைய நிலையை தெளிவுபடுத்த வேண்டும், இல்லையெனில், திமுக இன்னொரு மொழிப்போருக்கு ஆயத்தமாகும். தமிழ்நாட்டில் உள்ள நட்பு சக்திகள் மட்டும் இன்றி, இந்தி ஆதிக்கத்தால் உரிமைகளை இழக்கும் இந்தியாவின்  பெரும்பாலான மாநிலங்களையும் இணைத்து ஜனநாயக போர்களத்தை சந்திக்க திமுக தயங்காது. 

குடிமைப்பணி, ரயில்வே, அஞ்சல்துறை, வங்கிப்பணி என ஒவ்வொன்றிலும் இந்திய திணிக்க முயற்சித்து, இப்போது இந்தியா ஏங்கிய ஒருமைப்பாடு நிறைந்த நாட்டுக்கு வேட்டு வைக்கும் வகையில், இந்திதான் இந்தியாவின் அடையாளம் என்கிற குரல் ஒலிக்கிறது. நாட்டின் ஒருமைப்பாட்டை காக்க திமுக தயாராக இருக்கிறது. இது இந்தியா, 'இந்தி'யா அல்ல என எச்சரிக்கிறது" என குறிப்பிட்டுள்ளார்.  

 

Trending News