வைகுண்ட ஏகாதசி: சொர்க்கவாசல் திறப்பு; பூஜை முறை, முக்கியத்துவம் என்ன?

Vaikuntha Ekadashi 2023: வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவில், திருப்பதி ஏழுமலையான் கோவில்களில் சொர்க்கவாசல் திறக்கப்பட்டுள்ளது.  

Written by - Vijaya Lakshmi | Last Updated : Dec 23, 2023, 06:36 AM IST
  • ஆண்டுதோறும் மார்கழி மாதம் வளர்பிறையின் ஏகாதசி வைகுண்ட ஏகாதசியாக கொண்டாடப்படுகிறது.
  • மிகவும் புண்ணியம் தரும் விரத நாள் ஏகாதசி ஆகும்.
  • அதிகாலை 4 மணி அளவில் சொர்க்கவாசல் திறக்கப்பட்டது.
வைகுண்ட ஏகாதசி: சொர்க்கவாசல் திறப்பு; பூஜை முறை, முக்கியத்துவம் என்ன? title=

வைகுண்ட ஏகாதசி 2023 / சொர்க்கவாசல் திறப்பு: வைகுண்ட ஏகாதசி அன்று அதிகாலையில் திறக்கப்படும் பரமபத வாசல் அன்று இரவு நடை சாத்தப்படும் போது அடைக்கப்பட்டு விடும். ஆனால் திருப்பதியில் தொடர்ந்து 10 நாட்களுக்கு சொர்க்கவாசல் திறந்திருக்கும். பக்தர்கள் அனைவரும் பரமபத வாசல் வழியாக சென்று ஏழுமலையானை தரிசிக்க முடியும். மறுபுறம் திருச்சி, ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் வைகுண்ட ஏகாதசி விழாவை முன்னிட்டு இன்று (சனிக்கிழமை) அதிகாலை 4 மணி அளவில் சொர்க்கவாசல் திறக்கப்பட்டது. அதுமட்டுமின்றி தமிழகம் முழுவதும் உள்ள பெருமாள் திருக்கோயில்களில் சொர்க்கவாசல் இன்று திறக்கப்பட்டது.

​வைகுண்ட ஏகாதசி 2023:
ஆண்டுதோறும் மார்கழி மாதம் வளர்பிறையின் ஏகாதசி வைகுண்ட ஏகாதசியாக கொண்டாடப்படுகிறது. வைணவர்களின் மிக முக்கியமான, மிகவும் புண்ணியம் தரும் விரத நாள் ஏகாதசி ஆகும். வருடத்தின் மற்ற மாதங்களில் வரும் ஏகாதசி அன்று விரதம் இருக்க முடியாதவர்கள் கூட வைகுண்ட ஏகாதசி அன்று விரதம் இருந்து பெருமாளை வழிபட்டால் வருடம் முழுவதும் ஏகாதசி விரதம் பலனை பெற்று விட முடியும். அது மட்டுமல்ல அவர்களின் அனைத்து பாவங்களும் நீங்கி, அவர்களுக்கு வைகுண்ட பதவியும் கிடைக்கும் என்பது ஐதீகம்.

மேலும் படிக்க | இந்த 4 ராசிக்கார பெண்களுக்கு புத்தாண்டில் மங்களகரமான நிகழ்வு நடக்கும்!

​ஸ்ரீரங்கம் வைகுண்ட ஏகாதசி விழா:
பூலோக வைகுண்டம் என போற்றப்படும் திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் வைகுண்ட ஏகாதசி விழா 20 நாட்கள் விழாவாக கொண்டாடப்படும். வைகுண்ட ஏகாதசிக்கு முந்தைய 10 நாட்கள் பகல் பத்து எனவும், பிறகு வரும் 10 நாட்கள் இரா பத்து எனவும் கொண்டாடப்படும்.

திருப்பதி வைகுண்ட ஏகாதசி விழா:
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் 10 நாள் உற்சவமாக வைகுண்ட ஏகாதசி கொண்டாடப்படும். இந்த 10 நாட்களும் பரமபத வாசல் திறந்திருக்கும். அதன் வழியாக சென்று பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள்.

வைகுண்ட ஏகாதசி பூஜை முறை:
இன்று வைகுண்ட ஏகாதசி விழாவை முன்னிட்டு சூரிய உதயத்திற்கு முன் எழுந்து நீராட வேண்டும். உண்ணாவிரதத்தைத் தொடங்கி, நெய் தீபம் ஏற்றி, உங்கள் வீட்டின் பூஜை மந்திரில் உள்ள விஷ்ணுவின் படம் அல்லது சிலையின் முன் தியானம் செய்யுங்கள். விஷ்ணு பூஜை செய்யும் போது துளசி, மலர்கள், கங்கை நீர் மற்றும் பஞ்சாமிர்தம் சேர்க்க வேண்டும். நீங்கள் மாலையில் புதிய பழங்களை சாப்பிடலாம். ஏகாதசியின் மறுநாள் ஏழைகளுக்கு உணவு வழங்க வேண்டும்.

வைகுண்ட ஏகாதசி விரத நன்மைகள்: 
வைகுண்ட ஏகாதசியன்று விஷ்ணுவை நினைத்து விரதம் இருக்க வேண்டும். ஏகாதசி விரதம் இருப்பவர்கள் முதல்நாளான தசமி அன்று ஒருபொழுது உணவு உண்ணவேண்டும். ஏகாதசி நாளில் உண்ணாமலும் உறங்காமலும் விரதம் இருக்கவேண்டும் என்பதே முக்கியம்.

சொர்க்கவாசல் ஏன் திறக்கப்படுகிறது?
அவதார புருஷரான எம்பெருமானுடன் போரிட்டு அவரின் அருள் பெற்ற மது, கைடபர் என்ற இரு அரக்க சகோதரர்களுக்கும் கூட பெருமாள் வைகுண்டத்தை திறந்து தன் உலகிற்கு அழைத்து சென்றார். அதை அனுபவித்த அரக்கர்கள், தங்களுக்கு கிடைத்த பேறு உலகில் உள்ள அனைவருக்கும் கிடைக்க வேண்டும் என்று பெருமாளிடம் வேண்டினர். மேலும் வைகுண்ட ஏகாதசி நாளில் திருவரங்கம் வடக்கு வாசல் வழியாக  தாங்கள் அர்ச்சாவதரத்தில் வெளிவரும் போது தங்களை தரிசிப்பவர்களும், தங்களை பின் தொடர்பவர்களும் எத்தகைய பாவம் செய்திருந்தாலும் அவர்களுக்கு முக்தி அளிக்க வேண்டும். அவர்களின் வேண்டுகோளை பெருமாள் ஏற்றுக்கொண்டார். இதன் காரணமாகவே வைகுண்ட ஏகாதசி அன்று சொர்க்க வாசல் திறக்கப்பட்டு சாமி பவனி வரும் நிகழ்ச்சி ஏற்பட்டது. அன்றைய தினம் சொர்க்க வாசல் வழியாக பெருமாளை தரிசனம் செய்தால் பாவங்கள் நீங்கி மோட்சம் கிடைக்கும் என்பது நம்பிக்கை.

மேலும் படிக்க | 2024 புத்தாண்டு ராசிபலன்: இந்த 4 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் கொட்ட போகிறது!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News